
திண்டுக்கல் பேருந்து நிலையம் தென் தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது . இந்த பேருந்து நிலையத்தில் தினந்தோறும் பல ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் வந்து செல்லும் நிலையில் போதிய இட வசதி இல்லை என்ற காரணத்தினாலும் நகரின் மத்தியில் இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இடம் ஒதுக்கி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வருகின் 25.09.2026 அன்று வெளியாக உள்ள புதிய திரைப்படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் நகர பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் நிகழ்ச்சி நடத்திக்கொள்ள காவல்துறை அனுமதி பெற்றதாகவும் ( எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது ) ஆனால் கரூர் , பழனி , திருச்சி மற்றும் நகர பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் நுழையும் வழியில் பத்துக்கும் மேற்பட்ட கார்கள் லாரி மற்றும் விளம்பர வாகனம் உட்பட பேருந்துகள் உள்ளே நுழைவதற்கு இடைஞ்சலான வகையில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை உருவாக்கியது மட்டுமின்றி அரை நிர்வாண படுக்கையறை காட்சிகள் அதனை பார்க்கும் சிறுவர்கள் வெட்கப்படுவது போன்ற காட்சிகளுடன் கூடிய திரைப்படத்தின் விளம்பர விடியோவை ஒளிபரப்பியுள்ளனர்.
திரையரங்குகளிலேயே இதுபோன்ற காட்சிகள் இடம்பெறும் நிலை வந்தால் அதெற்கென பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் பொது இடத்தில் இதுபோன்று அரை நிர்வாண காட்சிகளை எந்தவித ஒளிவு மறைவின்றி திரைப்பட புரமோஷன் என்கிற பெயரில் ஒளிபரப்பியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது .
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.