
சென்னையில் ஓடும் ரயிலில் பெண் காவலரிடம் செல்போன் பறிக்க முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தமிழ்நாடு காவல்துறையில், தடய அறிவியல் பிரிவில் பணியாற்றும் அடோலின் பிரபா என்பவர் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, சானடோரியம் ரயில் நிலையத்தில், வடமாநில நபர் ஒருவர், அடோலின் பிரபாவின் செல்போனை பறித்துக் கொண்டு, தப்பி செல்ல முயன்றுள்ளார். உடனே சுதாரித்து கொண்ட பெண் காவலர் அடோலின் பிரபா கூச்சலிட்டப்படி திருடனை பிடிக்க முயன்ற போது நடைமேடையில் தவறி விழுந்த நிலையில், ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்கள், செல்போன் திருடனை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். செல்போன் திருட்டில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜெய் என்பவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தனது கணவரை விடுவிக்க கோரி, அஜெயின் மனைவி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, நடைமேடையில் தவறி விழுந்த பெண் காவலர் அடோலின் பிரபா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
