
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கனரக லாரிகள் அடுத்தடுத்து, தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் தனியார் சர்வீஸ் சென்டரில், கனரக வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. அங்கு ஏராளமான கனரக வாகனங்கள் பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், டாரஸ் லாரி ஒன்றில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அங்கிருந்த ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், தீ வேகமாகப் பரவத் தொடங்கியதால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அதற்குள், அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் தீப்பற்றியதால் மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




