போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர மேலகவுண்டனூர் கிராம பொது மக்கள் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட மல்லப்புரம் கிராமம், மேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 மாணவ, மாணவிகள் அழகாபுரி, புதுச்சட்டியூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களுக்குப் பள்ளி நேரத்திற்கு ஏற்ப போதிய பேருந்து வசதி இல்லாததால், அவர்கள் சரியான நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அவர்களின் அன்றாடக் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாணவ, மாணவிகள் எவ்வித இடையூறுமின்றித் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, பள்ளி நேரத்திற்கு ஏற்ப சரியான நேரத்தில் அரசுப் பேருந்து வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி, மேலகவுண்டனூர் கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என 20க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட குறை தீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.