
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேதாந்தம் முருகப்பா நாயக்கர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில், அந்த இடம் தொடர்பாக தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், நீதிமன்ற உத்தரவை மீறி சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை பணிகளையும் மேற்கொள்ள முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவர் சிவா, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இருப்பினும், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
