
பழனி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் வரும் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், CB-CID தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த நில மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் வாரிசுகள் மற்றும் பிற நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முருகதாஸ், வெள்ளத்துரை ,சேதுபதி மற்றும் அன்வர்தீன் ஆகிய நான்கு பேரையும், போலீசார் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த நீதிபதி, கைது செய்யப்பட்ட 4 பேரையும் வரும் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.