பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் க்கு ஆம்னி பேருந்தில் பயணித்த தம்பதியிடம் அரவக்குறிச்சி அருகே 25-பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் – மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் உள்ள கொடைரோடு டோல்கேட்டில், இன்று 23.08.26 அதிகாலை பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி சொகுசு பேருந்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த ஆர்த்தி-கனி என்ற தம்பதியினர் பயணம் மேற்கொண்ட போது தாங்கள் எடுத்து வந்திருந்த நகைகளுடன் சேர்த்து தாங்கள் அணிந்திருந்த நகைகளையும் கழட்டி தங்கள் ஹேண்ட் பேக்கில் பத்திரமாக வைத்து கொண்டு சென்றுள்ளனர். மொத்த தங்க நகையின் மதிப்பு சுமார் 25 பவுன் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஒரு பேக்கரியில் பேருந்தை நிறுத்திய போது மனைவி ஆர்த்தி அந்த ஹேண்ட் பேக்கை தூங்கிகொண்டிருந்த தனது கணவர் அருகே வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. திரும்பி வந்து பார்த்தபோது கணவர் கையில் ஹேண்ட்பேக் இன்றி பஸ்சிற்கு வெளியே நின்றதால் அதிர்சியடைந்த மனைவி கணவரிடம் விசாரித்து அவர்கள் பயணித்த பேருந்தின் இருக்கை முழுவதும் தேடி நகைகள் கிடைக்காததால்,பேருந்து ஓட்டுனரிடம் புகார் அளித்தனர் அதனைக் கண்டு. கொள்ளாத பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீண்டும் பஸ்ஸை எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணித்துள்ளனர்.
இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான ஆர்த்தி-கனி தம்பதியினர் தங்களது உறவினர்களின் ஆலோசனைப்படி செல்போன் மூலம் காவல்துறையில் புகார் அளித்தனர். அதற்குள் பேருந்து திண்டுக்கல் – மதுரை தேசிய நான்குவழிச் சாலையில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியை அடைந்தது.
அங்கு தயாராக இருந்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் பேருந்தை மடக்கி நிறுத்தி, பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கண்டித்து
பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி சோதனை செய்தனர். தொடர்ந்து தம்பதியினரிடம் புகாரை பெற்ற காவல் துறையினர், சம்பவம் நடைபெற்ற எல்லைக்குட்பட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அரவக்குறிச்சிக்கு முன்பும் பின்பும் இறங்கிய பயணிகள் விவரம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிகாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

