
மதுரை மாநகர் கூடல்நகர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி – யோகலட்சுமி தம்பதியினரின் மகன் தமிழ்செல்வன். இவர் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தமிழ்செல்வனின் தந்தை வெளியூரில் பணியாற்றி வரும் நிலையில், தாயார் யோகலட்சுமி, சகோதரி மற்றும் தமிழ்செல்வன் ஆகிய மூவரும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று விடுமுறை நாள் என்பதால் காலையில் கிரிக்கெட் விளையாடச் செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு தமிழ்செல்வன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தமிழ்செல்வனை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால், இது குறித்து கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்பொழுது, ஆட்கள் நடமாட்டம் குறைந்த முட்புதர் பகுதியில் காயங்களுடன் தமிழ்செல்வன் நீரில் கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தமிழ்செல்வன் தனது வீட்டருகே உள்ள வேறோரு சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் நட்பு ரீதியாக பேசிவந்துள்ளார். இதனிடையே, தமிழ்செல்வன் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் நட்பாக பேசி வந்ததாகவும், இதுதொடர்பாக மாணவியின் தந்தை சில நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது மாணவன் காயங்களுடன் ஆட்கள் நடமாட்டம் இல்லாத முட்புதர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால், அவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இச்சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்துள்ள போலீசார், பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

